Tuesday 2 May 2017

பயணம்... ❤


சில தெரியாத மொழிகளையும், பல புரியாத பெயர் கொண்ட பகுதிகளையும் உள்ளடக்கி, கடல் மட்டத்தில் இருந்து 5,642மீ உயர்ந்தும், 477,488 km2 பரப்பளவில் பிரம்மாண்டமாய் விரிந்தது காகசஸ் மலை. ரஷ்ய சம்மேளனத்தில் தொடங்கி, ஜார்ஜியா, அசர்பைய்ஜான், ஆர்மேனியா போன்ற நாடுகளை தொட்டு, கிழக்கே கேஸ்பியன் கடலையும் மேற்கில் கருங்கடலையும் இனைக்கும் மிக நீண்ட மலைத்தொடர். 

30கிமீ மொத்த பயணதூரம். மலைஏறி பார்ப்பதென்று முடிவாயிற்று. டென்ட்டும், கேம்புக்கு தேவையான அத்தியாவசிய பொருளை உள்ளடக்கி என் பேக்பேக் தயாரானது. பயணம் தொடங்கிற்று.. வழியெங்கும் பச்சை கம்பளம் போர்த்திய புல்வெளிகள், பல வண்ண பூக்கள், சுதந்திரமாய் சுற்றி திரியும் பட்டாம் பூச்சிகள், யாரது எங்கள் கோட்டைக்குள் அத்துமீறியதென தேகம் பாய்ந்து போர் புரியும் பெயர் தெரியா பூச்சிகள்.., இல்லை போராளிகள். வெயில், மழை இரண்டும் உடல் நனைத்தது.. ஆங்காங்கே இளைப்பாரி, நெருப்பு மூட்டி உருளைக்கிழங்கு, முட்டை, சாசேஜ் உண்று தெம்பேற்றினோம். மழை நனைக்கையில் கட்டன் சாயா. நாவரண்டு களைப்பில் வேகம் குறைகிறது, ஒருவரை ஒருவர் உற்சாகமூட்டி முன்னேறி செல்கிறோம். சற்று தூரத்தில் அருவியின் இரைச்சல், அந்த பச்சை வாசம் நுரையீரலின் கிளையெங்கும் பச்சை நிறம் பூசி மண்வாசம் நிறப்பியது. தண்ணீருக்கு சுவையும் உண்டு மணமும் உண்டு, அங்கமெங்கும் குளிரூட்டியது. களைத்து போன பாதங்களை அருவியில் இலவசமாய் மசாஜ் செய்து புத்துயிர் ஊட்டினேன். தசையெங்கும் வலி பிழிந்து எடுக்கையில் அந்த காடும், காற்றும் ஏதோ ஒரு எனர்ஜியை எனக்குள் ஊற்றி கொண்டே இருந்தது. இரவு படுக்கை மலை உச்சியில், தாலாட்டு அருவியின் சலசலப்பில், விடியல் பறவையின் கூச்சலில் என்ற காட்சி மனக்கண்ணில் விரிகிறது, காலை எழும் சூரியனை மலை உச்சியில் இருந்து சுண்டி விடலாம் என்ற அகந்தை என் பயணத்தை இலகுவாக்கியது. 

இலக்கை அடைந்தாயிற்று, களைப்பெல்லாம் கலைத்து கர்ஜயித்தேன்.. உலகை வென்றுவிட்டதாய் ஒரு உணர்வு. டென்ட் ரெடிஆகிறது.. ஒரு பக்கம் பனி, மறுபக்கம் அருவி, நடுவில் டென்ட் டிவைன். பெண்ணழகைவிட இயற்கை பேரழகி என்பதாலையே தவம் புரிய காட்டுக்குள் செல்கிறார்கள் போலும். கேம்ப் பயர், இரவு விருந்து ம்ம்ம் அத்தனை சுவை அந்த கபாப். இதற்கெல்லாம் ஒரு தவம் வேண்டும். இரவு குடித்து, நிலா ரசித்து, எண்ண முடியாத நட்சத்திரங்களை எண்ணி எண்ணியே தோற்று போனேன்.. நிசப்தமான இரவில் பூச்சிகளின் ரிங்காரத்தில் இமைகள் ஒன்றை ஒன்று கட்டி அனைத்து கெண்டது. 

காலை புத்துணர்வாய் புலர்ந்தது. மலை அடிவாரத்தில் இருந்து ஒருவர் குதிரையில் வந்திருந்தார்.. காகசஸ் மலையில் குதிரை சவாரி. மனம் துள்ளி குதித்தது. நான் ஓட்டி பாக்கட்டுமா ப்ளீஸ் கேட்டேன். சட்டென பார்வையாலே ஆச்சர்யம் கலந்த கேள்வி வீசினார்கள். "அவ்வளவு எளிதல்ல, ரொம்ப ஆபத்தானது, பேலன்ஸ், கண்ட்ரோல் அதுவும் மலையில கட்டாய பயிற்சி வேணும், ரிஸ்க்" கை, கால் உடைந்தாலும் பிறவாயில்ல என் பதில். ஏறியாயிற்று, மாவீரன் அலெக்சாண்டர் கண்முன்னே வந்துபோனான், அளப்பரிய ஆனந்தம், ஆகச்சிறந்த அனுபவம், கை நடுங்குகிறது, காலால் எட்டி தட்டுகிறேன் குதிரை கிளம்பிற்று.. இதயம் படபடத்து கண் இறுக்கி, சுதாரித்து கண் திறந்தால் சொர்க்கத்தில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறேன். சாவாரியின் தூரம் சிறிதென்றாலும் உலகை சுற்றிவிட்டதாகவே நம்புகிறேன். அந்த பயணம் முடிந்து விட்டது ஆனாலும் போதையில் மீளாமல் மனம் இன்னும் பயணிக்கிறது.. ❤

1 comment: