Wednesday 29 March 2017

சிநேகிதனே... ❤




யாரும் கர்ணணை பார்த்திறாத போது, என்னுடன், எனக்கடுத்து, என்கூடவே தோள் கொடுத்து நின்றவன் அவன்.. எதற்காகவும் என்னை யாரிடமும் விட்டு கொடுத்திறாதவன், தன்னை காட்டிலும் என்னை அதிகம் நேசித்தவன். இவ்வுலகில் புனிதமும் கண்ணியமும் எதுவென்றால் தயங்காமல் இந்த ஆண், பெண் நட்பை சொல்வேன்! காதல் என்பது கேப்பிட்டலிஷம், நட்பே சோசலிஷம். 

வாழ்க்கை என்னை விரட்டி அடித்த போதும், ஏமாற்றம் என்னில் குடிகொண்ட போதும் ஆதரவாய் கரம் பற்றி ஆறுதலாய் பேசியவன் நீ. என்னை நித்தம் தேற்றி என் தோல்வி ரணங்களில் வெற்றி மருந்திட்டவன் நீ. எப்போதெல்லாம் என் செயலுக்கு இந்த உலகம் திமிர் என்றும் தலைக்கணம் என்றும் பெயரிட்டதோ அப்போதெல்லாம் இது தன்னம்பிக்கை என்றும் தைரியம் என்றும் எனக்குள் நம்பிக்கையை நாளும் விதைத்து கொண்டே இருந்தாய்.. என் புண்ணகைக்கு காவலனாய் இருந்தாய், பலரின் பார்வையில் கேள்வி குறியாகவும், சிலரின் பார்வையில் ஆச்சர்யகுறியாகவும் நிறுத்தப்பட்டோம்..!

நீ இன்றி இந்த வாழ்க்கை இத்தனை எளிதாய், ஸ்வாரஸ்யமாய் இருந்திருக்காது. இத்தனையும் சாத்தியப்பட்டிருக்காது. எனக்கான ஒவ்வொரு முயற்சியிலும் உன் மெனக்கிடுதல் என் ஆர்வத்தை காட்டிலும் அதிகம் என்றால் அது மிகையாகாது. என் வீட்டில் இன்னொரு பிள்ளையாய் நீ, உன் அம்மா சமைத்ததை நீ சாப்பிடதை காட்டிலும் நான் சாப்பிட்ட நாட்களே அதிகம்...

நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கு சமம் என்பார்கள், நீ கூகுளுக்கே சமமடா. அவ்வளவு நேசம் உன்னில். எத்தனையோ அழகான சாலைகளை நம் பயணங்கள் பார்த்திருக்கிறது, பல பெயர் தெரியா கடையில் பரோட்டாக்களையும், பல வித பிரியாணியையும் சுவைத்திருக்கிறது நம் வாழ்க்கை. கியர் வண்டி ஓட்டியதெல்லாம் நீ பின்னால் இருந்து உற்சாகபடுத்தியதாலேயே. படம் பார்ப்பதற்கென்றே சென்னை போன நாட்களும் உண்டு. உனக்கு சட்டைகூட, நான் தான் உனக்கு செலக்ட் செய்ய வேண்டும். பர்ப்யூம் வாங்க டியூட்டி ப்ரீ சென்ற நாட்களும், செருப்பு வாங்கியதை செலிபிரேட் பண்ண நாட்களும் இன்னும் லைப் ஸ்டைலில் தொடரத்தான் செய்கிறது. 

உன்னிடம் பிடித்ததும் பிடிக்காததும் நீ என்னை அடிப்பது மட்டுமே.. என்னிடம் உனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என் வசைகளாகத்தான் இருக்கும். உன்னிடத்தில் கடலளவு கோபம் கொண்டாலும் கடுகளவும் சந்தேகம் கொண்டதில்லை. என் விடியலில் வெயிலாய், இரவுகளில் நட்சத்திரமாய் என் வாழ்வை மெருகேற்றி கொண்டே இருக்கிறாய். என் தோள் மீது கைபோடும் முதல் உரிமைக்கான நண்பன் நீயே. ஒரு அலாதீயான பிரியத்துடன் உன் கை பிடித்து ஒரு பயணம் வேண்டும். இதுவரை உன் உச்சி முகர்ந்ததில்லை, ஆனால் இப்போது ஆசை. உன் நட்பாய், சகோதரியாய் உன் உச்சி முகர்ந்து நெத்தியில் முத்தமிட ஆசை. புரிதல் கொண்ட உன்னுடன் என் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. 

என் வாழ்க்கை புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் நீ கமாக்களாய் தொடர்கிறாய்.. முன்னுரை கொடுத்த நீயின்றி முடிவுரை எழுதப்பட போவதில்லை இந்த புத்தகத்திற்க்கு. உன் நட்பில் நனைந்திட இந்த ஒரு ஜென்மம் போதாது சிநேகிதனே... 

நண்பேன்டா... சியர்ஸ் ❤

No comments:

Post a Comment